24 ஜனவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்


தெரிந்ததும் தெரியாததும்(பகுதி-2)


மனித மேம்பாட்டுக் குறியீடு என்றால் என்ன?

          சுகாதாரம் , கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு மக்கள் செலவிடும்  தொகையின் அளவே மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகும். இத்தொகை அவரவர் வருமானத்தைப் பொருத்தே அமையும். வளர்ந்த நாடுகளில் இக்குறியீடு மிகவும் உச்சத்தில் உள்ளது.

மனித மேம்பாட்டுக் குறியீடு நம்ம ஊரில் எப்படியிருக்கிறது?   
      மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சென்னை மாவட்டம் (0.842) புள்ளிகளுடன் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தருமபுரி(0.656), கிருஷ்ணகிரி(0.665), விழுப்புரம்(0.667) முதலிய மாவட்டங்கள் கடைசியில் உள்ளன.ஒரு புள்ளியைப் பெற்றால் அந்த மாவட்டம் சிறந்த மாவட்டமாக கருதப்படும். நம்ம நாகை மாவட்டம் (0.738) புள்ளிகள் பெற்றுள்ளது.
தனிநபர் வருமானம் நம்ம ஊரில் எப்படியிருக்கிறது?
முதலிடத்தில் உள்ள சென்னையில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.5,496.88 ஆகவும், வறுமை சதவீதம் 10.2 ஆகவும் உள்ளது.தொழில் வளர்ச்சி பெற்ற தூத்துக்குடியில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.3,928.26 ஆகவும், வறுமை சதவீதம் 35.00 ஆகவும் உள்ளது.  நாகை மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2576/- ஆகவும், வறுமை சதவீதம் 10.9 ஆகவும்  உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2341/- ஆகவும், வறுமை சதவீதம் 16.6 ஆகவும்  உள்ளது. { நம்ம ஊரு கிராம நிர்வாக அதிகாரிகிட்ட போயி  ஆண்டு வருமானம் ரூ.2341/- என்று சொல்லி வருமானச்சான்று கேட்டால் கொடுப்பாரா? ஆனால் அது தான் நிஜம் என்று மத்திய அரசின் புள்ளியியல் துறை சொல்லுதுங்கோ!}  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்களில் வறுமை 45 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
விவசாயத்தை விட்டுடாதிங்க!
                 நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வறுமை சதவீதம் குறைவாக இருப்பதற்கு காரணம் விவசாயம் தான். தொழில் வளர்ச்சி பெற்றுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் வறுமை சதவீதம் மிகுதியாக உள்ளது.இதிலிருந்து என்ன புரியுது? தொழில் வளர்ச்சியால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன் பெறுகின்றனர்.{பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவான் அவ்வளவுதான்!}ஆனால் விவசாயம் செய்வோரின் ஆண்டு வருமானம் குறைவாக இருந்தாலும், வறுமை அதிகமாக இல்லை. வடமாவட்டங்களில் தொழிலும் இல்லை, விவசாயமும் இல்லை.அதனால்தான் வறுமை அதிகமாக உள்ளது.
---------------நன்றி - தினமணி --------





தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

18 ஜனவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்

 
சந்திரரே,சூரியரே!
1.  சூரியன் உதிக்கிறது என்பதும், சூரியன் மறைகிறது என்பதும்  வெறும் மாயை. தினசரி சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பதையும் நாம் பள்ளிப்பாடத்தில் படித்துள்ளோம்.அவ்வாறு பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் உண்டாகிறது. அப்பொழுது சூரியன் உதிப்பது போலவும், மறைவது போலவும் நமக்கு காட்சியளிக்கிறது. மற்றபடி, சூரியனிடம் தினசரி எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
2.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருந்தால்         அது சூரிய கிரகணம்.பூமிக்கு இருபுறமும் சந்திரன் சூரியன் இருந்தால் அது சந்திர கிரகணம்.
3.    லூனார் மாதம் என்பது ஒரு முழு நிலவுக்கும் அடுத்த முழு நிலவுக்கும் இடைப்பட்ட நாட்கள். அதாவது (29 1/2) நாட்கள் ஆகும்.
4.  மரங்கள் இலைகள் மூலம் சூரிய ஒளியை உள்வாங்கும் தன்மை உடையவை.அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான உணவை தயார் செய்கின்றன.அதேபோல, செயற்கை சூரிய மரங்கள் மூலம் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றமுடியும். அதற்கு இரும்பு மரத்திலான தூணைப் பயன்படுத்தி இலைகளுக்குப் பதிலாக 2x2 சதுர அடி பரப்பளவு கொண்ட சூரியப்பலகைகளை தூணில் பொருத்தி சூரியக் கதிர்களை உள்வாங்க வைக்கவேண்டும். இரும்பு மரத்தின் நீளம் 50 முதல் 70 அடி வரை இருக்கலாம்.அடித்தளம் 2x2 அல்லது 3x3 சதுர அடி இருக்கலாம். 40 முதல் 50 சூரியப்பலகைகளை இரும்புத்தூணைச் சுற்றிலும், கிளைகள் அமைத்து அதனுள்ளும் பொருத்தலாம். சூரியப்பலகைகள் அதிக அளவு சூரியக் கதிர்களை உள்வாங்குவதற்கு ஏற்றாற்போல அமைக்கவேண்டும்.செயற்கை சூரிய மரங்கள் மூலம் புவிக்கு எந்தவொரு தீங்கும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க முடியும்.
5. இரவில் விண்மீன்கள் கண் சிமிட்டுகின்றன அல்லவா! உண்மையில் அவை கண் சிமிட்டுவதில்லை.அதுவும் ஒரு மாயத்தோற்றந்தான்!அதேபோல பறக்கும்தட்டு என்பதும் கோள்களின் ஒரு மாயத்தோற்றந்தான். இந்த மாயத்தோற்றங்களைக் கொடுப்பதில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் முதலிடம் வகிக்கின்றன.சில சமயங்களில் வால் வெள்ளிகள் எனப்படும் தூமகேதுக்களும் மாயத்தோற்றங்களைக் கொடுக்கின்றன. இந்த கோள்கள் அவற்றின் சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வருகையில், சூரிய ஒளி அதன்மேல் பட்டுத் தெறிக்க, முகில்களின் இடைஞ்சலும் பகற் பொழுதிலோ,  அந்திவேளையிலோ இந்தக் கோளின் மேல் ஒன்றாக இணைய, அது பல நிறங்களில் தோன்றுவதும் மறைவதும் போல் மாறி மாறி காட்சியளிக்கும். இந்த மாயத்தோற்றந்தான் நாம் பறக்கும்தட்டு என்று நினைத்துக் கொண்டிருப்பவை.


தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

01 ஜனவரி 2012

புத்தாண்டில் புதிய சபதமேற்போம் !

                                        புத்தாண்டை வரவேற்போம் !
 புதிய சிந்தனைகளுடன் , புதிய முயற்சிகளுடன்  புத்தாண்டை வரவேற்போம்!

                      ஆங்கில புத்தாண்டோ , தமிழ் புத்தாண்டோ நமது பிறந்த நாள் போல வருடந்தோறும் வருகிறது .சிலர் சில விசயங்களில்  புத்தாண்டு சபதம் ஏற்பார்கள்.அதை நடைமுறைப் படுத்தவும் முயற்சிப்பார்கள் .சிலர் அதில் வெற்றியும் காண்பார்கள் .சிலர் சபதம் எடுப்பதோடு சரி .பிறகு அதை மறந்தே போய் விடுவார்கள் .திரும்பவும் அடுத்த புத்தாண்டு வரும் .புதிதாக சபதம் ஏற்பார்கள்.
                          சிலர் இதுபோன்ற   வம்பு தும்புக்கெல்லாம் போவதேயில்லை .புத்தாண்டை கொண்டாடுவதோடு சரி.எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது அவரவர் பொருளாதார வசதியைப் பொறுத்து அமைகிறது.
                     நண்பர்களுடன் , நண்பிகளுடன் குடித்து கும்மாளமிட்டு  நள்ளிரவில்   அலம்பல் செய்கிறவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆ , ஊ என்று கூச்சலிடுகின்றனர் .தாறுமாறாக சாலைகளில் பைக்குகளிலும் , கார்களிலும் பறக்கின்றனர் .என்னதான் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவைகளை மீறுவதையே ஆண்மை என நினைக்கின்றனர் .நள்ளிரவில் கோவில்களுக்கும் , தேவாலயங்களுக்கும் வழிபட செல்வோர் இது போன்றவர்களால் மிகவும் அருவருப்படைகின்றனர் .மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்  .
                     புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வரை இல்லாத ஒன்று . தாராளமயமாக்கல் வந்த பிறகுதான் மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு நம் நாட்டில் மிகவும் அதிகமாகி விட்டது.நள்ளிரவு பார்ட்டிகளும் அதிகரித்து விட்டன.
                   முன்பெல்லாம் புத்தாண்டு மற்றும் பண்டிகைகளுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்புகின்ற நல்ல பழக்கம் நம்மிடையே  இருந்தது.வாழ்த்து அட்டைகள் விற்பனை கொடிகட்டி பறந்தன .ஆனால் இப்போது வாழ்த்து மடல் அனுப்புகின்றவர்கள் மிகவும் அருகி விட்டனர் .வாழ்த்துக்களை கைபேசி , தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவே பரிமாறிக் கொள்கின்றனர் .அதுவும் முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி வெறுப்பு ஏற்றுகின்றனர் .அதிலே ஒரு அற்ப சந்தோசம் அடைகின்றனர் .
                இந்த புத்தாண்டிலிருந்து ஒரு புதிய சபதம் செய்யலாமே !   நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே  வாழ்த்துக்களை தெரிவித்து மகிழலாமே ! மீண்டும் வாழ்த்து மடல்களை அனுப்ப ஆரம்பிக்கலாமே!வாழ்த்து அட்டைகள் தயாரிப்பில் ஈடுபடும் ஏழைகளை வாழவைக்கலாமே ! கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தலாமே! செய்யலாமா நண்பர்களே !

      தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!